தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் 66 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
எஸ்டி, எஸ்சி வன்கொடுமை சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுச் செயலர் ஆ.நாகராசன் தலைமையில் பெரியகுளத்தில் 49 பேர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட சென்றனர்.
இவர்களை பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர். மேலும் ஜெயமங்கலத்தில் 10 பேர், அல்லிநகரத்தில் 7 பேர் என மொத்தம் 66 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரையும் அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் விடுதலை செய்தனர்.