போடியில் வியாழக் கிழமை ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
போடி எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் அசோக் மனைவி கஸ்தூரி (47). இவர் பள்ளி ஆசிரியை. போடியில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்புக்குச் சென்றுவிட்டு ஆட்டோவில் திரும்பியுள்ளார். ஆட்டோவை போடி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்த மாரிச்சாமி மகன் சோலைராஜ் (24) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
போடி பழைய நீதிமன்றம் அருகே உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி முன் ஆட்டோ வந்தபோது, எதிரில் அதிக வேகத்துடன் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஆசிரியை கஸ்தூரி, ஆட்டோ ஓட்டுநர் சோலைராஜ் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த போடி அம்மாகுளத்தை சேர்ந்த நாகேந்திரபாண்டியன் மகன் விக்ரம் (17) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
மூன்று பேரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கஸ்தூரி, விக்ரம் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து ஆட்டோ ஓட்டுநர் சோலைராஜ் கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அ.ராஜலிங்கம் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.