கேரளத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் போடியிலிருந்து, மூணாறுக்கு பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் நீடித்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
கேரள மாநிலத்தில் தொடர் மழையால் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. மூணாறு-மதுரை நெடுஞ்சாலையில் போடிமெட்டு அருகே மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் கடந்த சில தினங்களாக போடியிலிருந்து செல்லும் வாகனங்கள் போடிமெட்டு வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டன. சுற்றுலா வாகனங்கள், தோட்டத் தொழிலாளர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
வெள்ளச்சேதம் தொடர்ந்து வருவதால் அரசு பேருந்து போக்குவரத்தும் முடங்கியுள்ளது. போடி- மூணாறு வழித்தடத்தில் பேருந்துகள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
இதனிடையே சனிக்கிழமை போடிமெட்டு வழியாக கேரள மாநிலம் பூம்பாறை வரை இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஜீப்புகள் அனுமதிக்கப்பட்டன. வாகன போக்குவரத்து முடங்கியுள்ளதால் கேரள பகுதியில் தோட்டம் வைத்துள்ள தமிழக விவசாயிகள் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.