கம்பம் அரசுப் போக்குவரத்துக் கழக நேரக் காப்பாளரை தாக்கிய தனியார் பேருந்து நடத்துனரை, போலீஸார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், கம்பம் அரசுப் போக்குவரத்துக் கழக நேரக் காப்பாளர் ராஜேந்திரன் (53). இவர், வியாழக்கிழமை கம்பம் பிரதான சாலையில் உள்ள சிக்னல் அருகே நின்று பணி செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த தனியார் பேருந்தை, நேரமாகி விட்டது ஓட்டிச் செல்லுங்கள் என்று ராஜேந்திரன் கூறியுள்ளார். இதனால், தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, தனியார் பேருந்து நடத்துனர் முருகன் என்பவர் ராஜேந்திரனை சரமாரியாகத் தாக்கிவிட்டு, பேருந்தில் ஏறிச் சென்றுவிட்டாராம். காயமடைந்த நேரக் காப்பாளர் ராஜேந்திரன், கம்பம் வடக்குக் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனியார் பேருந்து நடத்துனர் முருகனை தேடி வருகின்றனர்.