கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் 13 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நீர் வரத்து ஏற்பட்டதால், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. இந்த அருவியில் நீர் வரத்து கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதியுடன் நின்றது. இதனால், சுருளி அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகள், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், வனம் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் சுருளி அருவியில் நீர்வரத்து இல்லாவிட்டால், வன விலங்குகள், தாவரங்கள் தண்ணீரின்றி வாடும். எனவே, சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து தரும் மணலார் அணையிலிருந்து தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், அங்கிருந்து 10 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனாலும், அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் அளவுக்கு தண்ணீர் வரத்து இல்லை.
இதனிடையே, வெள்ளிக்கிழமை காலை சுருளி அருவியில் தண்ணீர் வரத்து தொடங்கியது. மேகமலை வன உயிரினச் சரணாலய அதிகாரிகள் அனுமதி அளித்ததை அடுத்து, 13 நாள்களுக்குப் பிறகு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.