போடி பொட்டல்களம் கிராமத்தில் சுடுகாட்டுக் கூரை அமைத்து தரவேண்டும் என, விவேகானந்தா இளைஞர் மன்றத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
போடி அருகே போ.மீனாட்சிபுரம் பேரூராட்சிக்குள்பட்ட கிராமம் பொட்டல்களம். இங்கு, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இக்கிராமத்துக்கென தனியாக மயானம் உள்ளது. பேரூராட்சிக்குச் சொந்தமான மயானத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் சுடுகாட்டுக் கூரை அமைக்கப்பட்டது. தற்போது, இந்தக் கூரை முழுவதும் சேதமடைந்து அழிந்துவிட்டது. மேலும், மயானம் முழுவதும் புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால், மழை, வெயில் காலங்களில் மயானத்துக்குச் சென்று இறுதிச் சடங்குகள் செய்வதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இங்கு சுடுகாட்டுக் கூரை அமைத்து தரவேண்டும் என்றும், மயானத்தில் உள்ள புதர் செடிகளை அப்புறப்படுத்தி தரவேண்டும் என்றும், இக்கிராமத்தில் உள்ள விவேகானந்தா இளைஞர் மன்றத்தினர் பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.