தேனி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டார வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரகுநாத் தலைமை வகித்தார்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் ராஜன், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் மாவட்டச் செயலர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி மாறுதல் மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வை காலதாமதமின்றி நடத்த வேண்டும். ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்க பணியாளர்களை மாற்றுப் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.