மக்களுக்கு கல்வியும், மருத்துவமும் இலவசமாக கிடைக்கும் நிலை வந்தால் நாடு வல்லரசாக மாறிவிடும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இவ்விழாவில் கவிஞர் வைரமுத்து மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கிய பின் பேசியதாவது:
நாட்டில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏழைகளாகவும், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பணக்காரர்களாகவும் கருதும் நிலை உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். அமெரிக்காவில் உள்ள பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புகின்றனர். அங்கு அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற்று சாதித்து வருகிறார்கள். எனவே அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளை சேர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும். நமது நாட்டில் திறமை வாய்ந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். கல்வி மற்றும் மருத்துவத்தை கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்கினால் நாடு வல்லரசாக மாறும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.