தேனி மாவட்டம், உத்தமபாளையம் அடுத்த கோம்பையில் ஞாயிற்றுக்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற மனைவியை காப்பாற்றச் சென்ற கணவரும் பலத்த காயம் அடைந்தார்.
கோம்பை திரு.வி.க. தெருவைச் சேர்ந்த பீமன் மகன் வெள்ளைச்சாமி (50). இவரது மனைவி ராமாயம்மாள் (45). வெள்ளைச்சாமிக்கு மதுப் பழக்கம் இருப்பதால், அடிக்கடி குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
வழக்கம்போல், ஞாயிற்றுக்கிழமையும் ஏற்பட்ட பிரச்னையால், ராமாயம்மாள் வீட்டில் சமையலுக்கு வைத்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே, வெள்ளைச்சாமி மனைவியை காப்பாற்றச் சென்றபோது, அவர் மீதும் தீப் பற்றியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.
பின்னர், அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் இவர்களை மீட்டு, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். இதில், ராமாயம்மாள் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கோம்பை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.