தேனியில் ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கக் கோரி, திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 220 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், கிராம ஊராட்சிப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்துக்கு, சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் சி. முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எம். ராமச்சந்திரன், கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலர் ஜெயபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில், ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு மாதம் ரூ. 4,750, துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ. 6,120 சம்பள உயர்வு வழங்க வேண்டும்.
ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பணிப் பதிவேடு பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 220 பேரை, தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.