கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் ரூ.30 லட்சம் செலவில் நடைபெறும் அம்மா பூங்கா, இளைஞர்களுக்கான உடற்பயிற்சி மையக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் ஊராட்சி பகுதிகளில் அம்மா பூங்கா, இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் தேனி மாவட்டத்தில் நாராயணத்தேவன்பட்டி ஊராட்சியில் உள்ள, அரசமரம் அருகில் உள்ள, 40 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டது. ரூ. 30 லட்சம் செலவில் நடைபெறும் இப்பணிகளில், பொதுமக்கள் அமரும் இருக்கைகள், நடைபாதை, மலர் செடிகள், மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகள் பராமரிக்கப்படும் இடங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைப்பு, உடற்பயிற்சிக் கருவிகள் பயன்படுத்தும் இடங்களை தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவித் திட்ட அலுவலர் முகமதுராஜிக் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கம்பம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ரெங்கராஜன், சேதுக்குமார் ஆகியோர் உடன் சென்று, திட்ட அலுவலரின் கேள்விகளுக்கு விளக்கம் கூறினர்.