தேனி மாவட்டம், லோயர் கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளியில், நீட் தேர்வு பயிற்சி மையத்தை செயல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், லோயர் கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தேனி லோயர் கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு தொடங்க உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்கள் பட்டியலில் லோயர் கேம்ப் அரசுப் பள்ளி 276-ஆவதாக இடம்பெற்றுள்ளது. இதில் பயிற்சிபெற பல்வேறு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் இப்பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தை செயல்படுத்தாமல், கம்பம் சிபியு மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் நீட் தேர்வு பயிற்சி மையத்துக்குச் செல்லுமாறு மாணவர்கள், ஆசிரியர்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால், பல மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, அனைத்து வசதிகளும் உள்ள லோயர் கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளியிலேயே ஏற்கெனவே அறிவித்தபடி, நீட் தேர்வு பயிற்சி மையத்தை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.