போடிநாயக்கனூரில் கோயில் திருவிழாவில் தகராறு செய்த ராணுவ வீரர் உள்பட 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
போடி பரமசிவன் கோயில் தெருவில் உள்ள சாத்தாவுராயன் கோயிலில் திருவிழா மணிகண்டன் (55) என்பவர் தலைமையில் நடைபெற்றது. இதில், காவடி எடுக்க சென்ற அதே பகுதியைச் சேர்ந்த பாலமுரளி (33), ராமச்சந்திரன் (36), முருகதாஸ் (33) ஆகியோர் இசை கலைஞர்களுடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனை தட்டிக்கேட்ட மணிகண்டன், கோயில் நிர்வாகிகளை மூவரும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும், திருவிழாவுக்காக கட்டப்பட்டிருந்த மின் விளக்குகளையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் போடி நகர போலீஸார் வழக்குப்பதிந்து, பாலமுரளி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் ராமச்சந்திரன் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.