ஆண்டிபட்டியில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கம் முன் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் விஜய் நடித்த இப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக அரசின் இலவச திட்டங்களை தவறாக சித்தரிப்பதாகவும் கூறி ஆண்டிபட்டி ஒன்றியச் செயலர் லோகிராஜன் தலைமையில் அதிமுகவினர் திரையரங்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் திரையரங்குக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீஸார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேரூர் அதிமுக செயலர் முத்துவெங்கட்ராமன், மாவட்ட பிரதிநிதி கவிராஜன், எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் செல்வராஜ், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் வெள்ளைப்பாண்டி, ஊராட்சி அதிமுக செயலர் செல்லமுத்து, ஒன்றிய மீனவரணி கண்ணன், முன்னாள் கவுன்சிலர் அருண்மதி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.