ஆண்டிபட்டி அருகே பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா பாலகோம்பை ஊராட்சிக்குள்பட்ட ராயவேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி பூங்கோதை (65). இவருக்கு 4 பெண் பிள்ளைகள். அனைவரும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர்.
கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் பூங்கோதை தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு உடல் நிலை மோசமடைந்ததால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இந்நிலையில் ராயவேலூர் கிராமத்தில் பன்றிக் காய்ச்சலால் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஆண்டிபட்டி தாலுகாவில் 4 பெண்கள் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் சுகாதாரத் துறையினர் தீவீர கண்காணிப்பில் ஈடுபட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.