பெரியகுளம் 14 ஆவது வார்டில் சுகாதார வளாகத்தை சீரமைக்கக் கோரியும் முறையாக குடிநீர் வசதி செய்து தரக் கோரியும் அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை திங்கட்கிழமை முற்றுகையிட்டனர்.
பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14 ஆவது வார்டு அழகர்சாமிபுரம் பகுதியில் உள்ள சுகாதார வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளவில்லை. மேலும் அப்பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரவில்லை என அப்பகுதியினர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இது குறித்து நகராட்சி பணியாளர்களிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து 14 ஆவது வார்டை சேர்ந்த பெண்கள் சுகாதார வளாகத்தை சீரமைக்கக் கோரியும், அப்பகுதியில் குடிநீர் வசதி செய்து தரக் கோரியும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் நகராட்சி பொறியாளர் திருமலை வாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.