ஆண்டிபட்டி அருகே ஆதிதிராவிடர் காலனியில் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வியாழக்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் உள்ள டி.வி.ரெங்கநாதபுரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் டெங்கு ஒழிப்புப் பணிகள் குறித்து திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு உள்ள ஆதிதிராவிடர் காலனியில் வீடு வீடாக சென்று குடியிருப்புகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்கள், ஆட்டுக்கல், குளிர்சாதனப்பெட்டிகள், கழிவு நீர் வாய்க்கால் செல்லும் பகுதிகளில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி உள்ளனவா என்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆய்வு குறித்து அவர் கூறியது: ஆதிதிராவிடர் காலனியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளன. இங்கு சேதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியினை உடனடியாக பராமரிக்கவும், தெருக் குழாய்களில் தினந்தோறும் சீராக குடிநீர் வழங்கவும், ஆதிதிராவிடர் காலனியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கால்நடை வளர்ப்பவர்கள் கழிவு நீரை, வாய்க்காலில் விடாமல் உறிஞ்சு குழிகள் அமைத்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பா.திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கே.ஜெயலட்சுமி, வட்டாட்சியர் பி.அர்ஜுனன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துப்பாண்டி உள்பட பல்வேறு அலுவலர்கள் உடனிருந்தனர்.