ஆண்டிபட்டி அருகே மழை காரணமாக விளை நிலத்தில் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.வி.ரெங்கநாதபுரம் பகுதியில் மின்கம்பம் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் விளை நிலத்தில் சாய்ந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மின்வாரியத்திற்கு புகார் கொடுத்ததை தொடர்ந்து அந்த பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால் மின்கம்பம் சாய்ந்து ஒரு வாரம் ஆகியும் இதுவரையில், அதனை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது தேனி பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் விளைநிலங்களில் விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மின்கம்பம் சாய்ந்ததால் இப்பகுதிகளில் எவ்வித பணிகளிலும் ஈடுபட முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். எனவே சாய்ந்து கிடக்கும் மின் கம்பத்தை சீரமைத்து மின்சார விநியோகத்தை தடையின்றி வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.