புரட்டாசி 4-ஆவது சனிக்கிழமையையொட்டி, போடி ஸ்ரீநிவாசபெருமாள், திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
போடி ஸ்ரீநிவாசபெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து ஸ்ரீநிவாசபெருமாளுக்கு மஞ்சள், பால், இளநீர், பழங்கள், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த அலங்காரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசித்தால், திருப்பதிக்கே சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் பாலகிருஷ்ணன், தலைமை அர்ச்சகர் சீனிவாச வரதன், அர்ச்சகர் அபிஷேக் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல் போடி- ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராயர் சுவாமி கோயில், போஸ் பஜார் ராமர் கோயில், மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயர்
சுவாமி கோயில், சிலமலை
பெருமாள் கோயில், தேவாரம் ரெங்நாதர் கோயில்களிலும் புரட்டாசி 4-ஆவது சனிக்கிழமையையொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
பழனியில்: பழனி லக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் சன்னதியிலும் பக்தர்கள் மஞ்சள், துளசி வழங்கி சிறப்பு பூஜைகள் செய்தனர்.
பழனியை அடுத்த பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில், ரெங்கசாமி கரடு ராமர் பாதம், கண்ணாடிப் பெருமாள் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகிரிப்பட்டி பஞ்சமுக ராம ஆஞ்சநேயர் கோயில், பாலாறு அணை ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. ராமநாதநகர் காரியசித்தி லட்சுமி நரசிம்மர் கோயில் மங்கள வண்ணங்கள் கொண்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தாமரைக்குளத்தில்: தாமரைக்குளம் வெங்கடாசலபதி கோயிலில் அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, தாமரைக்குளம் வீதிகளில் நகர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் தேனி எஸ்.தனலெட்சுமி, விமலா ஆகியோர் சார்பில்
அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.