சுருளி அருவி வனப் பகுதியில் பாறையில் வழுக்கி விழுந்து பெண் யானை குட்டி சாவு
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவி வனப் பகுதியில் பாறையிலிருந்து வழுக்கி விழுந்து, குட்டி பெண் யானை இறந்துகிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
தேனி மாவட்டம், மேகமலை வன உயிரின சரணாலய பகுதிக்கு உள்பட்ட, சுருளி அருவி சுருளிப்பட்டி வனப்பகுதி, வடக்கு பிரிவில் வெள்ளிக்கிழமை வனச்சரக ஊழியர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கைலாச நாதர் குகை கோயில் மேல்புறம், குட்டி யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்தனர். பின்னர், இதுகுறித்து வன ஊழியர்கள் கம்பம் கிழக்கு வனச்சரகர் துரை தினேஷுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து, நிகழ்விடத்துக்கு சென்று வனச்சரகர் பார்வையிட்டார். அப்போது, இரவு நேரம் ஆகிவிட்டது. அதையடுத்து, சனிக்கிழமை நாராயணத்தேவன்பட்டி கால்நடை மருத்துவர் செல்வத்தை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அதே பகுதியில் குழிதோண்டி யானை சடலத்தை புதைத்தனர்.
இதுகுறித்து கால்நடை மருத்துவர் செல்வம் கூறுகையில், இறந்து கிடந்தது சுமார் 5 மாத பெண் குட்டி யானை. உணவு தேடி வரும்போது பாறையிலிருந்து வழுக்கி விழுந்து இறந்தது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.