தேனி மாவட்டத்தில் கண்மாய், குளம் மற்றும் கால்வாய்களில் வண்டல் மண் அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்க, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அக்.25 ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் விவசாய நிலங்களை சீர்படுத்தவும், மண்பாண்டம் செய்வதற்கும், வீட்டு பயன்பாட்டிற்கும் பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய், குளம் மற்றும் கால்வாய்களில் படிந்துள்ள களிமண், வண்டல் மண் மற்றும் கிராவல் அள்ளுவதற்கு பொதுமக்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்படுகிறது.
கண்மாய், குளம் மற்றும் கால்வாய்களில் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அக்.25 ஆம் தேதி, காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் வருவாய் துறை, பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் அளிக்கும் மனுக்களை பரிசீலித்து அனுமதி வழங்குவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.