தேனி, நேருசிலை அருகே நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பில் உள்ள நடைபாதையை சீரமைக்க நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி, நேரு சிலை அருகே நகராட்சி பழைய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், பெரியகுளம், மதுரை நெடுஞ்சாலைகளில் பல லட்சம் ரூபாய் செலவில் நடைபாதையில் டைல்ஸ் கற்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், நடைபாதையில் ஆங்காங்கே கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும், நடைபாதையில், டைல்ஸ் கற்கள் பெயர்ந்தும், சேதமடைந்தும் உள்ளது. இதனால், பாதசாரிகள்
நடந்து செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், நடைபாதை அருகே உள்ள மழைநீர் வடிகால், சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் நடைபாதையில் வழிந்தோடுகிறது. இதனால், நடந்து செல்வோர் நடைபாதையில்
செல்லாமல் சாலையில் இறங்கி செல்வதால் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்கவும், பெரியகுளம், மதுரை நெடுஞ்சாலையில் நடைபாதையை விரிவாக்கம் செய்யவும் நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.