வீரபாண்டி, கண்ணீஸ்வரமுடையார் கோயில் படித்துறையில் முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தீயணைப்பு வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.
காமாட்சிபுரம் அருகே அழகாபுரியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் தாமோதரன் (20). இவர், தனது நண்பர்களுடன் வீரபாண்டிக்கு வந்துள்ளார். அங்கு கண்ணீஸ்வரமுடையார் கோயில் முல்லைப் பெரியாற்று படித்துறையில் ஆற்றில் இறங்கிய தாமோதரன், தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது, தாமோதரன் ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டிருந்த உறைகிணற்றின் மீது ஏறி நின்று உயிர் தப்பினார்.
இந்த தகவலறிந்து அங்கு வந்த தேனி தீயணைப்பு நிலைய பணியாளர்கள், ஆற்றின் நடுவே உறைகிணற்றின் மீது நின்றிருந்த தாமோதரனை மீட்டு ஆற்றங்கரைப் பகுதிக்கு கொண்டு வந்து சேர்ந்தனர்.