போடியில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கப்பட்டதாகக் கூறி, ஆட்டோ ஓட்டுநர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, நாடு முழுவதும் திங்கள் கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போடியில் முழு அடைப்புக்கு ஆதரவு கோரி பிரசாரத்தில் ஈடுபட்டபோது, போலீஸார் ஆட்டோ ஓட்டுநரை ஆட்டோவுடன் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர், அனைத்து கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தவே, ஆட்டோ ஓட்டுநரை விடுவித்தனர்.
இந்நிலையில் திங்கள் கிழமை சில ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்றினர். அப்போது, சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்த போலீஸார் அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கியதாகக் கூறி, ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்து நிறுத்தம் முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் 52 பேரையும் போலீஸார் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.