சின்னமனூர் அருகே சீலையம்பட்டி சமத்துவபுரத்திற்கு செல்லச் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட சீலையம்பட்டி அருகே வேப்பம்பட்டி - பூமலைக்குண்டு சாலையில் 2010-11 ஆண்டு தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டது. இங்கு 100 குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் குடிநீர், மின்சாரம், சாலை வசதி, ரேஷன் கடை என எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், சீலையம்பட்டியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் சமத்துவபுரம் அமைந்துள்ளது.
இந்த பகுதிக்கு பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீர் , மின்சார வசதி, ரேஷன் கடை என எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 8 மாதங்களாக சரளை கற்களாக இருந்த சாலையானது, தற்போது மண் சாலையாக மாறியுள்ளது.
இது தார்ச் சாலையாக மாறவேண்டும் எனவும், சமத்துவபுரத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காத்து கிடப்பதாக தெரிவித்தனர்.