ஆண்டிபட்டி வைகை அணை அருகே தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர், தண்ணீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் முத்துபாண்டி (18). இவர் 8 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் வெள்ளிக்கிழமை தனது நண்பர்களுடன் சேர்ந்து வைகை ஆற்றில் உள்ள தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை முதல் ராமநாதபுரம் குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை அறியாமல் ஆழமான பகுதிக்குச் சென்ற முத்துபாண்டி, தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இது குறித்து உடனே வைகை அணை போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு அவரது நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஆற்றில் 1 மணி நேர தேடலுக்குப் பின் முத்துபாண்டிசடலத்தைக் கைப்பற்றினர். பின்னர், போலீஸார் அவரது சடலத்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வைகை அணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.