தேனி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் உணவு பாதுகாப்புத் துறை பதிவுச் சான்று ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள உணவு பொருள் உற்பத்தியாளர்கள், பேக்கரி, உணவகம், தேநீர் கடை, பல்பொருள் விற்பனைக் கடைகள் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் படி, மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையிடம் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்று பெற வேண்டும்.
இந்தப் பதிவுச் சான்றின் நகலை தொழில் கூடம் மற்றும் கடைகளில் பொதுமக்கள் பார்வையில் படும் இடத்தில் ஒட்டி வைத்திருக்க வேண்டும். உணவு பாதுகாப்புச் சட்ட விதிகளின் படி உரிய தரத்துடன் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும்.
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனம் மற்றும் கடைகளின் உரிமம், பதிவுச் சான்று ரத்து செய்யப்படும்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை மற்றும் தரமற்ற உணவுப் பொருள் விற்பனை குறித்து 94440 42322 என்ற செல்லிடபேசி எண், கட்செவி அஞ்சல் மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.