தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் நகர் மற்றும் கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் சட்டவிரோத மதுபான விற்பனையால் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.
ஆண்டிபட்டி தாலுகாவில்
15 -க்கும் மேற்பட்ட அரசு மது பான கடைகள் மற்றும் 4 தனியார் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் உத்தரவின் பேரில் அரசு மதுபான கடைகள் அனைத்தும் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடமலைக்குண்டு, வருசநாடு, கா.விலக்கு, ராஜதானி, அம்மாபட்டி, சித்தார்பட்டி, பிச்சம்பட்டி, வைகை அணை, டி.சுப்புலாபுரம், கொண்டமநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பெட்டிக் கடைகள் மற்றும் தனிநபர்கள் வீடுகளில் பதுக்கி வைத்து அனுமதியின்றி மதுபான விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் ஆண்டிபட்டி பகுதிகளில் இயங்கி வரும் தனியார் மதுபான கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விடவும் கூடுதலாக மது விற்பனை செய்து வருகின்றன. மேலும் இதுபோன்ற இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி சட்ட விரோத மதுபான விற்பனையை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.