போடி அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தில் மாட்டுத் தரகரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கீழக்கூடலூர் ஆர்.எஸ். பள்ளி தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி முருகேஸ்வரி (30). இவர், போடி அரசு பொறியியல் கல்லூரி மாணவர் விடுதி அருகே தனியார் தோட்டத்தில், கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
முருகேஸ்வரியின் கணவர் இறந்து விட்ட நிலையில், போடி தருமத்துப்பட்டிக்கு முருகேஸ்வரி வந்தது எப்படி, அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து, போடி தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இதில், முருகேஸ்வரியின் சடலம் அருகே கிடந்த துண்டு சீட்டில் செல்லிடப்பேசி எண் கிடந்தது. அதனை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது, அவர் போடி சிலமலை கிராமத்தைச் சேர்ந்த ராசு மகன் முருகனை (50) என்பதும் முருகேஸ்வரியை அவர் தான் கொலை செய்தார் என்பதும் தெரியவந்தது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
முருகனுக்கும், முருகேஸ்வரிக்கும் கடன் விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாகவே, அவரை போடி தருமத்துப்பட்டிக்கு வரவழைத்து அங்கு கத்தியால் குத்தி முருகேஸ்வரியை கொலை செய்துள்ளார் என்றனர். கைது செய்யப்பட்ட, முருகனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.