கம்பம் அருகே பேருந்தில் ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்ட பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கூடலூர் கருணாநிதி காலனியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி இந்திரா (24). இருவரும் திங்கள்கிழமை அரசுப் பேருந்தில் கூடலூரில் இருந்து குமுளிக்கு சென்றனர். அப்போது பேருந்தில் பயணம் செய்த லோயர்கேம்ப்பைச் சேர்ந்த அழகுதங்கம் (35), பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு ஓட்டுநர் நிறுத்தத்தில் மட்டும்தான் பேருந்து நிற்கும், என்று கூறினாராம். இதனால், ஆத்திரமடைந்த அழகுதங்கம் ஆபாசமாக பேசினாராம். அப்போது, இந்திரா, பெண்கள் இருக்கும் இடத்தில் ஏன் இப்படி ஆபாசமாக பேசுகிறீர்கள் என்று தட்டி கேட்டுள்ளார்.
அப்போது பேருந்து நிறுத்தம் வரவே, அழகுதங்கம் மற்றும் அவரது உறவினர்கள் ஜெயக்குமார், வினோத்குமார் ஆகிய மூவரும் சேர்ந்து இந்திராவையும், அவரது கணவரையும் தாக்கினராம். இதுகுறித்து, இந்திரா குமுளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சார்பு
ஆய்வாளர் அல்போன்ஸ்ராஜா வழக்குப்பதிந்து, அழகுதங்கத்தை கைது செய்தனர். தப்பி ஓடிய இரண்டு பேரை தேடிவருகின்றனர்.