தேனி மாவட்டம் சுருளி அருவியில் செப்.23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சாரல் விழாவையொட்டி பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அருவிப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த கழிப்பறைகள், படிக்கட்டுகள் மற்றும் இருக்கைகள் ஆகியவற்றை மேகமலை வன உயிரின சரணாலயத்தினர் சீரமைத்து வருகின்றனர். மேலும் ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள பயணியர் தங்கும் விடுதியை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் உதவியுடன் சீரமைக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் சுருளி அருவிக்கு செல்லும் சாலையை "பேட்ஜ் ஒர்க்' செய்து வருகின்றனர். தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில், மேடை, பந்தல், கண்காட்சி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே வெள்ளத்தால் சேதமடைந்த தடுப்புக் கம்பிகள் அருவிப் பகுதியில் சீரமைக்கப்பட வில்லை. இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறும் போது, தொடர்ந்து, நீர்வரத்து உள்ளதால் அங்கு வேலை செய்ய முடியவில்லை. நீர்வரத்து குறைந்ததும், தடுப்புக் கம்பிகள் சீரமைக்கப்படும் என்றார்.
இதனிடையே இரண்டு நாள்கள் நடைபெற உள்ள சுருளி அருவி சாரல் விழாவையொட்டி அங்கு, கட்டண வசூலை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.