விருதுநகர் மாவட்டத்தில் அகற்றப்படாத சீமைக்கருவேல மரங்களை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி செல்வம் அறிவுறுத்தினார்.
விருதுநகர் அருகே உள்ள கலையன்குளம் கண்மாயை சனிக்கிழமை நீதிபதி ஆய்வு செய்தார்.
அப்போது நீதிபதி, விருதுநகர் ஒன்றியத்தில் எத்தனை கண்மாய்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன? தனியார் நிலங்களில் இவற்றை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மதுரை மாவட்டத்தில் 50 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சீமைக்கருவேல மரங்களாக உள்ளன.
மாவட்டத்தில் மொத்தம் 64.500 ஹெக்டேர் நிலப்பரப்பில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதில், 10.611 ஹெக்டேர் நிலப்பரப்பில் மட்டும் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள நிலப்பரப்பில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற அனைத்து மக்களும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். அதற்கு அலுவலர்கள் விரைவில் அனைத்து பகுதிகளிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (விருதுநகர்) முனியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் இருந்து அய்யனார் கோயில் செல்லும் சாலையில், வட்டாட்சியர் அலுவலகம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பிறண்டைக்குளம் கண்மாயில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்கள் தனியார் தொண்டு அமைப்பு சார்பில் அகற்றப்பட்டன.
இதை நீதிபதி செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கண்மாய் குறித்தும், நீர் வரத்து கல்வாய்கள், பாசன பகுதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கண்மாயை சுத்தப்படுத்திய தனியார் அமைப்புக்கு பாராட்டு தெரிவித்த அவர், மேலும் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.