நென்மேனி வைப்பாற்றில் சட்டவிரோதமாக மணல் திருடப்பட்டு வருவதால், 5-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாகவும், மணல் திருட்டை தடுக்கவும் கோரி, கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சாத்தூர் வட்டம், நென்மேனி
கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இப்பகுதியில் உள்ள வைப்பாற்றின் மூலமாக நென்மேனி, பொட்டல்
பச்சேரி, வன்னிமடை, நாகலாபுரம், முடித்தலை ஆகிய கிராமங்களில்
வசிக்கும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர்
தேவை பூர்த்தியாகிறது. எனவே, வைப்பாறு இப்பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், வைப்பாற்றில் அரசு அனுமதியின்றி காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உதவியுடன் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
இதனால், நென்மேனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால், குடிநீர் கிடைக்காமல் குழந்தை முதல் பெரியவர்கள் வரை தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
எனவே, நென்மேனி பகுதியில் தொடரும் மணல் திருட்டை தடுத்து, அப்பகுதி கிராம மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அதில் தெரிவித்துள்ளனர்.