மருத்துவக் கழிவு ஆலையை மூடக் கோரி  கிராமத்தினர் ஆட்சியரிடம் மனு

காரியாபட்டி அருகே அ. முக்குளம் கிராமத்தில் சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி செயல்படும் மருத்துவக் கழிவு ஆலையால்

காரியாபட்டி அருகே அ. முக்குளம் கிராமத்தில் சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி செயல்படும் மருத்துவக் கழிவு ஆலையால், ஏராளமானோர் உயிரிழந்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட ஆலையை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அக்கிராமத்தினர் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
      அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அ. முக்குளம் கிராமத்தில் தனியார் மருத்துவக் கழிவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் நச்சு புகை காரணமாக, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் ரத்த சுத்திகரிப்பு செய்து வருகின்றனர்.
     இந்த ஆலை நிர்வாகமானது, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமலும், மாசுக் கட்டுப்பாடு விதிகளை மீறி குடியிருப்பு மற்றும் நீராதாரப் பகுதியில் செயல்பட்டும் வருகிறது. இதற்கு, பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 2013 இல் மருத்துவக் கழிவு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
    ஆனால், அந்நிறுவனத்தை மூடுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்,  புதிதாக தற்போது மின்னணு கழிவுகள் மற்றும் பழைய பேட்டரி கழிவுகளை புதைக்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, இப்பகுதி விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 
    எனவே நீதிமன்ற உத்தரவுபடி, சுற்றுச்சூழல் துறை அனுமதியில்லாமல் செயல்படும் மருத்துவக் கழிவு ஆலையை மூடுவதற்கு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அதில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com