மாநில அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் ஏ.வி.கே. பள்ளியில் நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாதெமி சார்பில் சனிக்கிழமை மாநில அளவிலான மாரத்தான் மற்றும் டெங்கு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர், மகாத்மா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் 7 பேர் முதலிடத்தையும், 6 பேர் இரண்டாம் இடத்தையும், மூவர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். ஒட்டு மொத்த சாம்பியன் பட்டமும் இப் பள்ளிக்கு கிடைத்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திங்கள்கிழமை பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தாளாளர் ஜி.எஸ்.முருகேசன், முதல்வர் எம்.ராணி உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.