ஸ்ரீவில்லிபுத்தூரில் வெவ்வேறு சம்பவங்களில் தீப்பற்றி காயமடைந்த முதியவர்கள் இருவர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எஸ்.ராமச்சந்திராபுரம், கீழத் தெருவைச் சேர்ந்தவர் ரா. கோவிந்தன் (80). இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை கிடையாது. கண் பார்வையற்ற கோவிந்தன், கயிற்றுக் கட்டிலில் அமர்ந்துகொண்டு ஞாயிற்றுக்கிழமை பீடி பற்ற வைத்தாராம். அப்போது, தீக்குச்சியை அணைக்காமல் அப்படியே போட்டதில், அதில் இருந்த தீ படுக்கை மற்றும் அவரது உடையில் பிடித்ததில், கோவிந்தன் பலத்த காயம் அடைந்தார்.
வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
விளக்கிலிருந்து தீப்பற்றி முதியவர் சாவு: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாணாங்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மு. கருப்பையா (72). நான்கு மாதங்களுக்கு முன் கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு, சிகிச்சை முடிந்து 20 நாள்களுக்கு முன் வீடு திரும்பியுள்ளார். கடந்த 4-ஆம் தேதி கார்த்திகை தீபத்தையொட்டி, வீட்டு வாசலில் விளக்கு வைக்கப்பட்டுள்ளது.
அப்போது, கருப்பையா வெளியேயிருந்து வீட்டுக்குள்
வரும்போது, அவரது ஆடையில் தீப்பற்றி காயமடைந்துள்ளார். சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று
வந்த இவர், திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இரு சம்பவங்கள் குறித்தும் கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.