இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது: முன்னாள் துணைவேந்தர்
இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டி.விஸ்வநாதன் கூறினார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரியில் 11-வது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.பி.எம்,.சங்கர் தலைமை வகித்தார்.
விழாவில், 268 மாணவிகளுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை வழங்கி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.விஸ்வநாதன் பேசியதாவது: இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியா கலாசாரத்தில் சிறந்து விளங்குவது நமக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து. தனி மனித குணநலன்கள், தனி மனித ஒழுக்கமே வலுவான இந்தியாவுக்கு வழிவகுக்கும். மாணவிகள் நேர்மை, சகிப்புத் தன்மை, படைப்பாற்றல், வளைந்து கொடுக்கும் தன்மையோடு திகழ வேண்டும். பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு பொலிவுறு நகர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத் திட்டத்திற்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். எனவே மாணவிகள் அதற்கேற்ப தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேசப்பற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். உயர்ந்த குறிக்கோள், லட்சியத்துடன் செயலாற்ற வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, தாளாளர் பழனிச்செல்வி, துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ்.தங்கபிரபு, இணைத் தாளாளர் துர்கா மீனலோஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஆர்.ராஜசேகரன் வரவேற்றார். பேராசிரியை சரண்யா நன்றி கூறினார்.