ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி செயல் அலுவலரை கம்பால் தாக்கியவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் மா.சேகர் (47). இவர் வ.புதுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். வ.புதுப்பட்டி, திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பராஜ் (எ) தமிழ்செல்வன். இவருக்கு சின்னப்பராஜ் என்ற பெயரில் வறுமைக் கோட்டிற்கு கீழானவர் என்ற சான்றிதழ் உள்ளது. இதனை தமிழ்செல்வன் என்ற பெயருக்கு மாற்றித் தரக் கோரி, செயல் அலுவலர் சேகரிடம் கேட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை சேகர் பணியில் இருந்தபோது, மீண்டும் சின்னப்பராஜ் வந்து கேட்டுள்ளார். அப்போது சேகர், அரசு கெசட்டில் உள்ள பெயர்படி தான் சான்று வழங்கப்பட்டுள்ளது. இதனை மாற்ற இயலாது என்று கூறியுள்ளார்.
இதில் ஆத்திரமுற்ற சின்னப்பராஜ், சேகரை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து கம்பால் தாக்கினாராம். சப்தம் கேட்டு ஓடி வந்த பணியாளர்கள் சேகரை மீட்டனர். இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் சேகர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் சின்னப்பராஜ் (எ) தமிழ்செல்வன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.