ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை துன்புறுத்திய கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாச்சியார்பட்டி கிராமம் வங்கார்பட்டி சாலையில் குடியிருந்து வருபவர் சரண்யா (28). இவருக்கும் ஆலங்குளம், சங்கரமூர்த்திபட்டியைச் சேர்ந்த குருசாமி மகன் ஆனந்தமுத்து(33)வுக்கும் 10.12.2014-இல் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மனைவி மீது சந்தேகம் கொண்டு ஆனந்தமுத்து அவரை துன்புறுத்தியுள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்னையில் மனைவியின் 7 பவுன் நகைகளையும் அவரது படிப்புச் சான்றிதழ்களையும் பறித்துக் கொண்டு அவரை வீட்டுவிட்டு விரட்டி விட்டுவிட்டாராம்.
3.5.2017-ஆம் தேதி நகை மற்றும் சான்றிதழைக் கேட்டு கணவர் வீட்டிற்குச் சென்றபோது, கணவர் குடும்பத்தார் சேர்ந்து சரண்யாவை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இது குறித்து சரண்யா, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் மனு தாக்கல் செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் பேரில் போலீஸார் கணவர் ஆனந்தமுத்து, இவரது தாய் சுடலையம்மாள் (53), சகோதரர் நாகராஜ் (45), சகோதரிகள் ராஜலட்சுமி (28), கற்பகச்செல்வி (33) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.