சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 10 நாட்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சதுரகிரி ஸ்ரீ சுந்தர மாகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி வெளி நாட்டை சேர்ந்த பக்தர்களும் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மலை பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக, பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி போன்ற நாள்களுக்கு மட்டும் தான் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், கோயிலுக்கு செல்லும் மலை பகுதியில் பக்தர்கள் வசதிக்காக பாதை அமைக்கும் பணியும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இங்கு ஆடி அமாவாசை திருவிழா 10 நாள்களுக்கு மேல் கொண்டாடப்படுவது வழக்கம். ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வர். ஆனால், தண்ணீர் பற்றாக்குறையை காரணம் காட்டி 10 நாள்கள் திருவிழாவில் 4 நான்கு நாள்களுக்கு மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும் என வனத்துறை, சிவகாசி கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் சூடம் ஏற்றவும் தடை விதித்துள்ளனர். எனவே, இந்த தடையுத்தரவுகளை நீக்கி பக்தர்கள் 10 நாள்கள் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனர்.