சென்னை கொடுங்கையூரில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த விருதுநகர் தீயணைப்பு வீரரின் உடல் சொந்த ஊரில் போலீஸ் மரியாதையுடன் ஞாயிற்றுகிழமை இரவு அடக்கம் செய்யப்பட்டது.
விருதுநகர் அருகே தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏகராஜ் (55). விருதுநகர் தீயணைப்பு துறையில் பணியாற்றி வந்த இவர், மாற்றுப் பணியாக சென்னையில் பணியாற்றி வந்தார். சென்னை, கொடுங்கையூரில் ஞாயிற்றுக்கிழமை பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டபோது எரிவாயு உருளை வெடித்து சிதறியதில் ஏகராஜ் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல், சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் தடங்கம் கிராமத்திற்கு ஞாயிற்றுகிழமை இரவு 10.30 மணிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில், தீயணைப்புத் துறை தென்மண்டல துணை இயக்குநர் சரவணக்குமார், திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாண்டியன், விருதுநகர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.