ராஜபாளையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்திலிருந்து செலுத்திய பணத்தை திரும்ப பெற்று தரக் கோரி பாதிக்கப்பட்டோர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ராஜபாளையம்- தென்காசி சாலையில் அபிவிருத்தி அக்ரோ டெக் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் நிர்வாக இயக்குநர்களாக ராமகிருஷ்ணன், முருகேசன், வேல்முருகன் ஆகியோர் இருந்து வந்தனர். இந்த நிறுவனத்தில் மாதம் ரூ.500 முதல் ரூ.2000 வரை செலுத்தி வந்தோம். ஆனால், முதிர்ச்சி அடைந்த பணத்தை திருப்பித் தராமல் அலைக்கழித்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர்களை ஏற்கெனவே போலீஸார் கைது செய்துள்ளனர். நாங்களும் விருதுநகர் பொருளாதார குற்றபிரிவில் புகார் அளித்துள்ளோம். எனவே, நாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சண்முகம்மாள், காளியம்மாள், சுப்புலெட்சுமி, முத்துமணி உள்ளிட்ட பலர், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.