காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி புரிந்தவர்களுக்கு சம்பளம் வழங்க கோரி அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, காரியாபட்டி ஒன்றியம் வக்காணாங்குண்டு ஊராட்சியில் நடைபெற்ற நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஏராளமானோர் பணி புரிந்தோம். கடந்த ஒராண்டாக பணி புரிந்தமைக்கு பாதி நாள்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கியுள்ளனர். மீதி நாட்களுக்கு இதுவரை வழங்க வில்லை.
இது குறித்து ஊராட்சி செயலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
எனவே, நாங்கள் பணி புரிந்த நாள்களுக்கான ஊதியம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.