விருதுநகர் 18-ஆவது வார்டில், பழுதான ஆழ்துளை கிணறுடன் கூடிய மின் மோட்டாரை சீரமைக்கக் கோரி அப்பகுதியினர் நகராட்சி ஆணையாளர் சந்திர சேகரனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 18-ஆவது வார்டு பாறைப்பட்டி தெருவில் 10 நாள்களுக்கு ஒருமுறையே நகராட்சி குடிநீர் வழங்கப்படுகிறது. வீட்டு தேவைகளுக்கான உப்பு நீரை, வாசக சாலை அருகேயுள்ள ஆழ்துறை கிணறுடன் கூடிய மின் மோட்டார் மூலம் எடுத்து வந்தோம். அதில் உள்ள மின்மோட்டார் 6 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது. இதை சீரமைக்க கோரி நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை. எனவே, பழுதடைந்த மின் மோட்டார் மற்றும் அடிகுழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து ஆணையாளர், மின் மோட்டாரை பார்வையிட செவ்வாய்க்கிழமை பாறைப்பட்டி தெருவுக்கு வருவதாகவும், சிறிய பழுது என்றால் உடனே சரி செய்து தரப்படும். பெரிய பழுது இருந்தால், ஒரு வாரத்தில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.