ராஜபாளையம் அருகே இடப்பிரச்னையில் மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இரு போலீஸார் உள்பட 6 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தர்ராஜபுரத்தைச்சேர்ந்த மாரியப்பன் மனைவி சின்னத்தாய்(60). ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் காவலராக உள்ள மணிராஜ் குடும்பத்துக்கும் இவருக்கும் இடப் பிரச்னை உள்ளதாம். இது குறித்து சின்னத்தாய் காவல் நிலையங்களில் புகார்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், சின்னத்தாய் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து மணிராஜ் குடும்பத்தினரை கைது செய்யக் கோரி சின்னத்தாயின் மகன் வைரமுத்து மற்றும் உறவினர்கள் சேத்தூர் புறக்காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து சேத்தூர் புறக்காவல் நிலைய போலீஸார் மணிராஜ், இவரது சகோதரி சேத்தூர் காவல் நிலையத்தில் காவலராக உள்ள அழகுராணி, இவர்களது தந்தை சமுத்திரக்கனி, தாய் அழகுராணி, சகோதரி தேவராணி உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.