சாத்தூர் நகாராட்சி பகுதியில் மூடிக்கிடக்கும் கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன.
திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக அண்ணாநகர், மேலகாந்தி நகர், செல்லையாரம்மன் கோயில் தெரு, வெள்ளகரை ரோடு, வடக்கு ரதவீதி, பூங்கா, பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் இலவசம் மற்றும் கட்டண கழிப்பறைகள் அமைக்கப்பட்டன.
நமக்கு நாமே திட்டம், நம்ம டாய்லட், சட்டப்பேரவை உறுப்பினர் நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பல லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, இக்கழிப்பறைகள் கட்டப்பட்டன. இவ்வாறு கட்டப்பட்ட பல கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்க முன்னாள் வார்டு உறுப்பினர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஆனால், அவர்கள் கழிப்பறைகளை முறையாக பராமரிக்வில்லை என்றும், சில கழிப்பறைகள் திறக்கப்படவில்லை என்றும் அவை பூட்டப்படாமல் திறந்தே கிடப்பதால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் நகராட்சி நிர்வாகமே ஏற்று சுத்தம் செய்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சாத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள கழிப்பறைகளை முறையாக சுத்தம் செய்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.