நிலம் கையகப்படுத்தியதில் உரிய பணம் வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில், சிவகாசி வருவாய் கோட்டாட்சியரின் ஜீப் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
சிவகாசியில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு கட்டுவதற்காக 1988 ஆம் ஆண்டு அரசு நிலம் கையகப்படுத்தியது. அப்போது, காமராஜ் மகன் சம்பந்தம் உள்ளிட்ட 8 பேருக்கு ரூ. 20 லட்சம் நிலம் எடுப்புத் தொகை வழங்கப்படவில்லையாம். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
பின்னர், இந்த வழக்கு 2016ஆம் ஆண்டு சிவகாசி சார்பு-நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது வரை நிலம் வழங்கியவர்களுக்கு உரிய பணம் கொடுக்காததால், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன் பயன்படுத்தும் ஜீப்பை ஜப்தி செய்ய நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.
அதன்பேரில், நீதிமன்ற ஊழியர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த ஜீப்பை ஜப்தி செய்தனர்.