சத்திரரெட்டியபட்டி கிராமத்தில் வசிப்போருக்கு மின்னணு குடும்ப அட்டையில் புகைப்படம், பெயர், முகவரி மாற்றம் இருந்ததையடுத்து, அவற்றை திருத்தும் பணியில் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே உள்ள இக்கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது இவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே அங்கு வசிக்கும் 75 சதவீதத்தினருக்கு வழங்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டையில் புகைப்படம், பெயர், முகவரி மாற்றம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அக்கிராமத்தை சேர்ந்த பலர் அத்தியாவசிய பொருள்கள் வாங்க முடியாமல் தவித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பலர், விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அங்கு முகாமிட்ட வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் மின்னணு குடும்ப அட்டையில் உள்ள தவறுகளை திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது அட்டையில் திருத்தம் செய்தனர்.
இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலர்கள் கூறியது: கணினியில் ஏற்பட்ட குளறுபடியால் புகைப்படம், முகவரி உள்ளிட்ட தவறுகள் ஏற்பட்டுள்ளன. இதை முகாம் மூலம் சரி செய்து வருகிறோம். இன்னும் 2 நாள்களில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்றனர்.