பட்டாசு கடைகளில் உராய்தல் ஏற்படுவதைத் தடுக்க, கடையினுள் காலணி அணிந்து செல்லக்கூடாது என, விருதுநகர் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில், பட்டாசு கடைகளில் பாதுகாப்பு என்ற தலைப்பில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், தீயணைப்புத் துறை அலுவலர் சுப்பிரமணியம் மேலும் பேசியதாவது:
பட்டாசு கடைகளின் முன்பு வாளியில் தண்ணீர், மண் வைத்திருக்க வேண்டும். கடை அருகே வாடிக்கையாளர்களுக்கு பட்டாசு வெடித்து காண்பிக்கக் கூடாது. ஏராளமான வாடிக்கையாளர்களை ஒரே நேரத்தில் கடையினுள் அனுமதிக்கக் கூடாது.
பட்டாசு பண்டல்களை லாரியிருந்து இறக்கும் போதும், ஏற்றும் போதும் கவனமாக செயல்பட சுமைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
கடைகளில் உரிமம் பெற்ற அளவு மட்டுமே பட்டாசு வைத்திருக்க வேண்டும். கடையினுள் வைத்து பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரிக்ககூடாது. மெழுகுத் திரி, அகர்பத்தி உள்ளிட்டவைகளை கடையினுள்ளோ, கடை அருகிலே எரிக்கக் கூடாது.
கடையில் சுவாமி படங்கள் வைத்திருந்தால் அதற்கு சூடம் காண்பிக்கக் கூடாது. கடைகளில் கலர் மத்தாப்பூ மற்றும் கேப் வெடிகளை தனியே வைக்க வேண்டும்.
பண்டல்களை பேக்கிங் செய்யும் போது கவனமாக செயல்பட வேண்டும். பட்டாசு கடைக்குள் காலணி அணிந்து வர அனுமதிக்கக் கூடாது. கடை வாசலில் ரப்பர் மிதியடி வைக்க வேண்டும்.
மின்கசிவு ஏற்பட்டால் தானாக மின் இணைப்பைத் துண்டிக்கும் கருவி கடைகளில் கண்டிப்பாக பொருத்த வேண்டும்.
கிடங்குகளின் மேல் பகுதியில் இடிதாங்கி அமைக்க வேண்டும். விழிப்புடனும் கவனத்துடனும் செயல்பட்டு விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவோம் என்றார்.
இதில், சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவவர் முருகன், சிவகாசி பட்டாசுக் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.