விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையில், சுவரொட்டிகள் ஒட்டி அசுத்தப்படுத்துவதை தவிர்க்கும் வகையில், திருக்குறள் மற்றும் பொன் மொழிகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்திலுள்ள ஏராளமான பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை கட்டப்பட்டு, பயணிகள் அமர்வதற்காக சிமென்ட் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பயணிகள் பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் தஞ்சமடைகின்றனர்.
இந்நிலையில், பேருந்து நிறுத்த நிழற்குடையில் திருமணம், சினிமா உள்ளிட்ட பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அசுத்தப்படுத்தப்படுகின்றன. இதனால், பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் சுவரொட்டி ஒட்டுவதைத் தடுக்கவும், முன்மாதிரி நிழற்குடையாக மாற்றவும் கூரைக்குண்டு ஊராட்சியில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் உள்ள பேருந்து நிழற்குடையின் உள்புறம் வண்ணம் தீட்டி திருக்குறள், பொன்மொழிகள் மற்றும் பொது சுகாதார வளாகம் குறித்த விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்டுள்ளன.
இதில், மீறி சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த பேருந்து நிறுத்த நிழற்குடைக்கு குடும்பத்துடன் வரும் பயணிகள் ஆர்வத்துடன் திருக்குறள் உள்ளிட்டவற்றை படித்து பயன்பெறுவதுடன், பாராட்டிச் செல்கின்றனர்.